டெல்லி ஆலை தீ விபத்து! எலும்பு காயங்கள் ஏற்பட்ட நிலையிலும் 11 பேரை காப்பாற்றிய தீயணைப்பு படை வீரர்! குவியும் பாராட்டு

 

டெல்லி ஆலை தீ விபத்து! எலும்பு காயங்கள் ஏற்பட்ட நிலையிலும் 11 பேரை காப்பாற்றிய தீயணைப்பு படை வீரர்! குவியும் பாராட்டு

டெல்லியில் காகித ஆலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மீட்பு பணியின் போது எலும்பு காயங்கள் ஏற்பட்ட நிலையிலும் 11 பேரை காப்பாற்றிய தீயணைப்பு படை வீரர் ராஜேஷ் சுக்லாவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மத்திய டெல்லியில் ராணி ஜான்சி சாலையில் அனாஜ் மண்டி பகுதியில் பிரபல பேக் மற்றும் காகித தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. 6 மாடி கொண்ட இந்த தொழிற்சாலையில் நேற்றுமுன்தினம் வேலையை முடித்து விட்டு தொழிலாளர்கள் அங்கு உறங்கி கொண்டு இருந்தனர். நேற்று அதிகாலையில் யாரும் எதிர்பாராத சூழ்நிலையில் அந்த ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவம் இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். 30 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இந்த தீ விபத்தில் 43 பேர் பலியாகினர்.

டெல்லி காகித ஆலை தீ விபத்து

தீயணைப்பு வீரர்களில் தீ பற்றி எரிந்த ஆலைக்குள் சிறிது தாமதிக்காமல் உள்ளே முதலில் நுழைந்தவர் தீயணைப்பு படை வீரர் ராஜேஷ் சுக்லா. தீக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் துரிதமாக செயல்பட்ட போது அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இருப்பினும் அதனை பற்றி கவலைப்படாமல் 11 பேரின் உயிரை காப்பாற்றினார். மேலும் தீ அணைக்கும் பணி முடியும் வரை தனது காயத்தை பொருட்படுத்தாமல் இறுதி வரை களத்தில் நின்று பணியாற்றினார். அதன் பிறகே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றார். அவர் மட்டும் உள்ளே செல்வதற்கு சிறிது தாமதம் செய்து இருந்தாலும் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து இருக்கும்.

சுக்லாவுடன், டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின்

காயம் அடைந்த நிலையில் பல பேரின் உயிரை காப்பாற்றிய ராஜேஷ் சுக்லாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். டெல்லி மாநில அமைச்சர் சத்யேந்திர ஜெயின், எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் ராஜேஷ் சுக்லாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன், பாராட்டவும் செய்தார். இது குறித்து சத்யேந்திர ஜெயின் தனது டிவிட்டரில் சுக்லாவின் போட்டாவை போஸ்ட் செய்து, தீயணைப்பு வீரர் ராஜேஷ் சுக்லாதான் நிஜ ஹீரோ. அவர்தான் தீ விபத்து பகுதிக்குள் முதலில் நுழைந்து 11 பேரின் உயிரை காப்பாற்றினார். தனக்கு எலும்பு காயங்கள் ஏற்பட்டபோதிலும் தீயை அணைக்கும் பணி முடியும் வரை தொடர்ந்து தனது வேலையை செய்தார். துணிச்சலான ஹீரோவுக்கு சல்யூட் என பதிவு செய்து இருந்தார்.