டெல்லியில் நடந்த மனித உரிமை மீறல் விவகாரத்தில் தலையிடக்கோரி ஐ.நா.வுக்கு கடிதம்….. பீம் ஆர்மி தலைவர்

 

டெல்லியில் நடந்த மனித உரிமை மீறல் விவகாரத்தில் தலையிடக்கோரி ஐ.நா.வுக்கு கடிதம்….. பீம் ஆர்மி தலைவர்

டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்களின் போது நடந்த கடுமையான மனித உரிமை மீறல் விவகாரத்தில் தலையிடக்கோரி ஐ.நா.வுக்கு பீம் ஆர்மி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் கடிதம் எழுதியுள்ளார்.

வடகிழக்கு டெல்லியில் கடந்த வாரம் குடியுரிமை திருத்த சட்ட எதிர்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் மொத்தம் 47 பேர் பலியாகி உள்ளனர். இந்த வன்முறை சம்பவங்களை அனுமதித்ததாகவும் மற்றும் அதனை தடுக்க பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை என டெல்லி போலீசாரின் மீது ஒரு தரப்பினர் குற்றச்சாட்டி வருகின்றனர்.

வடகிழக்கு டெல்லி கலவரம்

இந்நிலையில், பீம் ஆர்மி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத், அரசால் அனுமதிக்கப்பட்ட டெல்லி வன்முறை சம்பவங்களின் போது நடந்த கடுமையான மனித உரிமை மீறல் விவகாரத்தில் தலையிடக்கோரி ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், அமல்படுத்தப்பட்ட பிரச்சினைக்குரிய குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் குடியுரிமையை பறிக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

வன்முறையாளர்கள்

வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக போலீசார் இதுவரை 335 எப்.ஐ.ஆர்.கள் போட்டு உள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானோரை கைது செய்துள்ளனர். ஒரு கூடுதல் கமிஷனர், 2 துணை கமிஷனர்கள் மற்றும் 8 உதவி கமிஷனர்கள் அடங்கிய காவல் துறையின் 2 சிறப்பு விசாரணை குழுக்கள் இந்த வழக்குகளை விசாரணை செய்து வருகிறது.