டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சிந்து அதிர்ச்சி தோல்வி; சாய்னா போராடி வெற்றி

 

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சிந்து அதிர்ச்சி தோல்வி; சாய்னா போராடி வெற்றி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் போராடி வெற்றி பெற்றார்

ஒடென்சி (டென்மார்க்): டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் போராடி வெற்றி பெற்றார்.

டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் பி.வி.சிந்து அமெரிக்காவின் பீவென் ஜாங்குடன் மோதினார். சுமார் 55 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 17-21, 21-16, 18-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

அதேபோல், மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவின் சாய்னா நேவால், ஹாங்காங் வீராங்கனையான செங் நகன் யுயை எதிர்கொண்டார். சுமார் 1 மணி நேரம் 21 நிமிடங்கள் நடந்த பரபரப்பான இந்த ஆட்டத்தில், 20-22, 21-17, 24-22 என்ற செட் கணக்கில் சாய்னா நேவால் போராடி வெற்றி பெற்றார்.

மேலும், ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் இந்திய வீரர் சமீர் வர்மா, 21-17, 21-18 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் ஷி யுகியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.