டிடிவி தினகரனுக்கு அழைப்பு? பதறி போய் விளக்கமளித்த ஓபிஎஸ்

 

டிடிவி  தினகரனுக்கு அழைப்பு? பதறி போய் விளக்கமளித்த ஓபிஎஸ்

சென்னை: டிடிவி தினகரனுக்கு தான் அழைப்பு விடுத்ததாக வெளியாகியுள்ள செய்தி தவறான தகவல் எனத் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ‘வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தேசிய, மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் அதிமுகவை விட்டு பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி மீண்டும் கட்சியில் வந்து இணைய வேண்டும்.  அடிப்படையில் இருந்து அவர்கள் கட்சிக்காக உழைக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

ttv

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுப்பதாக செய்திகள் பரவின.  இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஓபிஎஸ், ‘ டிடிவி தினகரனுக்கு நான் அழைப்பு விடுத்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தவறான தகவல். 18 MLAக்களில் பலர் கழகத்தில் மீண்டும் இணைய விரும்புகின்றனர், அவர்களுக்கு அழைப்பு என்றுதான் கூறியிருந்தேன். உண்மைக்கு புறம்பாக பரப்பப்படும் தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன், யாருடன் கூட்டணி வைத்தாலும் அதிமுகவால் ஜெயிக்கமுடியாது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.