டிக்கெட் எடுக்காத போலீசாருடன் வாக்குவாதம் | ஓடும் பேருந்திலேயே உயிரிழந்த நடத்துநர்

 

டிக்கெட் எடுக்காத போலீசாருடன் வாக்குவாதம் | ஓடும் பேருந்திலேயே உயிரிழந்த நடத்துநர்

கடலூர் அருகே, அரசுப் பேருந்து நடத்துனருக்கும், காவல்துறை காவலர் ஒருவருக்கும் இடையே அடையாள அட்டை காண்பிப்பது தொடர்பாக கடும் வாக்குவாதம் நிலவிய நிலையில்,பேருந்து நடத்துனர் ஓடும் பேருந்திலேயே மயங்கி விழுந்து  உயிரிழந்துள்ள சம்பவம், பொதுமக்களிடையே போலீசாரின் போக்கு குறித்து கவலைக்கொள்ள செய்துள்ளது. 

திருச்சியிலிருந்து கடலூர் செல்லும் அரசு பேருந்து ஒன்று விருத்தாசலம் அருகே சென்றுக் கொண்டிருந்த போது, திட்டக்குடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் பழனிவேல் என்பவர் சீருடை அணியாமல் பேருந்தில் ஏறிய நிலையில், நடத்துனரான கோபிநாத், பழனிவேலிடம் பயணச்சீட்டு வாங்குமாறு கோரியுள்ளார். அதற்கு பதிலளித்த பழனிவேல், தான் போலீஸ் என தெரிவித்த நிலையில், போலீஸ் என்றால் அதற்கான உரிய அடையாள அட்டையை காட்டுங்கள் என நடத்துனர் கோபிநாத் முறையிட்டுள்ளார். ஆனால் காவலர் பழனிவேலோ தனது அடையாள அட்டையைக் காட்டுவதற்கு சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.கடலூர் பேருந்து நிலையம்

காரசாரமான வாக்குவாதம் இருவருக்கும் தொடர்ந்த நிலையில், நடத்துனர் கோபிநாத் திடீரென மயங்கி விழுந்துள்ளார். பின்னர் நெய்வேலியில் உள்ள மருத்துவமனைக்கு பேருந்தில் வைத்து அவர் கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், பேருந்தில் பயணம் செய்த பயணிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த காவலர் பழனிவேலை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.