டாஸ்மாக் கடைகளில் மது வாங்க இதெல்லாம் தேவையில்லை.!?
தொடரப்பட்ட அவசர வழக்கில், டாஸ்மாக்குகளை மூடுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஊரடங்கு காலத்தில் அனைத்து டாஸ்மாக்குகளும் மூடப்பட்டிருந்ததால், எப்போது தான் மதுக்கடைகள் திறக்கும் என்று குடிமகன்கள் ஆவலுடன் காத்துக் கிடந்தனர். அச்சமயம் பார்த்து தான் குடிமகன்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தியை தமிழக அரசு அறிவித்தது. அதாவது கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை ஈடுகட்ட டாஸ்மாக் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது குடிமகன்களிடையே ஆனந்தத்தை ஏற்படுத்திய நிலையில், டாஸ்மாக் திறக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் குவிந்தன.
அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் திறப்பதற்கு எந்த வித தடையும் இல்லை என்று பச்சைக் கொடி காட்டியதோடு அடையாள அட்டை காட்டினால் தான் மது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளும் விதித்தனர். அதன் படி 7 ஆம் தேதி டாஸ்மாக்குகள் திறக்கப்பட்டன. முதல் நாளே டாஸ்மாக்குகளில் கூட்டம் களைகட்டி சமூக இடைவெளி காற்றில் பறந்தது. ஆனால் வருமானம் ரூ.140 கோடியை எட்டியது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளும் அதே நிலை தொடர்ந்தது. அதனால் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவசர வழக்கில், டாஸ்மாக்குகளை மூடுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
2 நாட்களிலேயே கிட்டத்தட்ட ரூ.300 கோடி வருமானத்தை ஈட்டிய டாஸ்மாக்கை மூடுமாறு கூறிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதனை இன்று விசாரித்த நீதிபதிகள், உயர்நீதி மன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். தொடர்ந்து, ஊரடங்கு காலத்தில் ஆன்லைன், ஹோம் டெலிவரி மட்டுமே செய்யலாம், ஆதார் அட்டையின் நகலைத் தந்தால்தான் மது என்ற உயர் நீதிமன்ற ஆணைக்கு தடை விதித்த நீதிபதிகள் எந்த வழிவகைகளில் மது விற்கலாம் என்பதை அரசு தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இனிமேல் மது வாங்க ஆதார் அட்டையெல்லாம் தேவை இல்லை என்பது தெளிவாகிறது.