“டாஸ்மாக்கை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வருவதை மறந்திடுங்க”- நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்
சரக்கு கிடைத்தால் போதும் என்ற அளவிற்கு டாஸ்மாக்குகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த 43 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக கடந்த 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதே போல டாஸ்மாக்கை திறக்கலாம் என்று பச்சைக்கொடி காட்டிய நீதிமன்றம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனால் சரக்கு கிடைத்தால் போதும் என்ற அளவிற்கு டாஸ்மாக்குகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இது குறித்து கடந்த 8 ஆம் தேதி எழுந்த அவசர வழக்கில் கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படாததால் டாஸ்மாக்குகளை மூட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. டாஸ்மாக்குகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்ற வீடியோக்களும் போட்டோக்களும் சமர்பிக்கப்பட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, டாஸ்மாக்கை திறப்பது என்பது அரசின் கொள்கை முடிவு, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என குறிப்பிட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
— Rajinikanth (@rajinikanth) May 10, 2020
இந்நிலையில் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.