ஜெயலலிதா மரணத்திற்கு நீதான் காரணம்: தினகரனை ஒருமையில் விமர்சித்த அமைச்சர்

 

ஜெயலலிதா மரணத்திற்கு நீதான் காரணம்: தினகரனை ஒருமையில் விமர்சித்த அமைச்சர்

ஜெயலலிதா மரணத்திற்கு நீயும் உனது குடும்பமும்தான் காரணம் என டிடிவி தினகரனை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்

விழுப்புரம்: ஜெயலலிதா மரணத்திற்கு நீயும் உனது குடும்பமும்தான் காரணம் என டிடிவி தினகரனை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகி உள்ளது. அவரது மரணத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனையும் விசாரிக்க வேண்டும் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் சமீபத்தில் முன்வைத்தார்.

இதனையடுத்து, அமைச்சர் சி.வி சண்முகத்தை முதல்வர் பழனிசாமி கட்டுப்படுத்த வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, தமிழக அரசு எந்திரத்தின் இதயம் போன்றவர் ராதாகிருஷ்ணன் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

இந்நிலையில், திண்டிவனத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று அதிமுக தொண்டன் என்ற முறையில் கேள்வி எழுப்பினேன். இதில் அரசியல் அதிகாரிகளாக இருந்தால் என்ன, யாராக இருந்தால் என்ன?  அமைச்சர்களை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மிரட்டும் தொனியில் பேசுகின்றனர் என்றார்.

மேலும், அவர் டிடிவி தினகரன் குறித்து பேசுகையில், திருடனுக்கு திருடன் சாட்சி சொல்வது போல் இவர்களுக்கு அவர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள். தினகரன் வாய்க்கு வந்ததெல்லாம் பேசாத. நாங்கள் பேச ஆரம்பித்தால் நீ தாங்கமாட்ட. உனது ஆட்டம் பாட்டத்தை எல்லாம் உன் உல்லாச பங்களாவில் வைத்து கொள். அந்த மயக்கத்திலிருந்து தெளிந்து வந்த பிறகு பேசு. நாங்கள் அடிமட்ட தொண்டர்கள். நீங்கள் எல்லாம் போயஸ் வீட்டுக்கு வேலைக்காரர்களாக வந்து அந்த வீட்டை ஆக்கிரமித்தவர்கள். ஜெயலலிதா மரணத்திற்கு நீயும் உன் குடும்பமும்தான் காரணம் என ஒருமையில் விமர்சித்தார்.