ஜெயலலிதா மகள் என உரிமை கோரிய அம்ருதா வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 

ஜெயலலிதா மகள் என உரிமை கோரிய அம்ருதா வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஜெயலலிதா மகள் என உரிமை கோரிய அம்ருதாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை: ஜெயலலிதா மகள் என உரிமை கோரிய அம்ருதாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தள்ளுபடி செய்துள்ளது.

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை தன் தாய் என கூறி உயர்நீதிமன்றத்தில் பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் மனு அளித்திருந்தார்.

இன்று நடைபெற்ற அந்த மனு மீதான விசாரணையின் போது, நீதிபதியிடம் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வீடியோ ஆதாரத்தை சமர்ப்பித்தனர்.

குறிப்பாக, அம்ருதா கொடுத்திருந்த மனுவில், 1980 ஆகஸ்ட் 14-ம் தேதி தான் பிறந்ததாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு சரியாக ஒரு மாதம் முன் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சி ஒன்றில், ஜெயலலிதா பங்கேற்பது போன்ற வீடியோ காட்சிகளை வைத்து, அந்த சமயத்தில் ஜெயலலிதா கர்ப்பமாக இருந்திருக்க வாய்ப்பில்லை என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

jayalalaitha

அதுமட்டுமின்றி, ஜெயலலிதாவின் சகோதரி என கூறப்படும் சைலஜா, அம்ருதாவை வளர்த்து வந்ததாக வழக்கில் வைக்கப்படும் வாதத்தில் உண்மையில்லை எனக் குறிப்பிட்ட அரசின் வழக்கறிஞர், தனது சகோதரரி ஜெயலலிதா எனக்கூறி வார இதழுக்கு பேட்டியளித்த சைலஜாவுக்கு எதிராக சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவே அவதூறு வழக்கு தொடர்ந்ததற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

இதற்கு பதிலளித்த அம்ருதா தரப்பு வழக்கறிஞர், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நிரூபிக்க அம்ருதாவுக்கு மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், டி.என்.ஏ. சோதனை நடத்தினால் மட்டுமே உண்மைகள் வெளிவரும் எனவும் வாதங்களை முன்வைத்தார். 

madurai court

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், எந்த ஒரு ஆதாரங்களும் தாக்கல் செய்யாமல் டி.என்.ஏ சோதனைக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதாவின் வாழ்க்கை முழுவதும் மர்மமாகவே இருந்ததுள்ளது. ஆனால், ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்கவும், டி.என்.ஏ. பரிசோதனை கோருவதற்கும் அம்ருதாவிடம் எந்தவித ஆதாரமும் இல்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டுள்ளார்.