ஜெட் ஏர்வேஸ் வழித்தடங்களை மற்ற நிறுவனங்கள் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி…..

 

ஜெட் ஏர்வேஸ் வழித்தடங்களை மற்ற நிறுவனங்கள் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி…..

ஜெட் ஏர்வேஸ் தனது விமான சேவையை நிறுத்தியதால், டிசம்பர் இறுதிவரை காலியாக உள்ள அதன் வழித்தடங்களை இதர உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் பயன்படுத்த விமான துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

நம் நாட்டின் விமான சேவை துறையில்  சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல லாபகரமாக செயல்பட்ட தனியார் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ். கடந்த சில ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதிநெருக்கடியில் சிக்கி தவித்தது. பல்வேறு வங்கிகளில் கடனை வாங்கி காலத்தை தள்ளிய ஜெட் ஏர்வேஸ் வாங்கிய கடனை முறையாக திரும்ப செலுத்த தவறிவிட்டது. இதனால் கடன் கொடுத்த வங்கிகள் ஜெட் ஏர்வேசுக்கு நெருக்கடி கொடுத்தன. 

இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம்

ஆனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. மேலும், கடந்த ஏப்ரல் மாதம் தனது விமான சேவையை முற்றிலுமாக நிறுத்தியது. இதனையடுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை திவால் நடவடிக்கையில் ஈடுபடுத்த ஸ்டேட் வங்கி நடவடிக்கை எடுத்தது. தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திவால் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

விமானங்கள்

ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை நிறுத்தியதால் மற்ற விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் விமான போக்குவரத்து சேவை பற்றாக்குறையும் ஏற்பட்டது. இதனால் செப்டம்பர் 30ம் தேதி வரை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சில வழித்தடங்களை  மற்ற நிறுவனங்கள் பயன்படுத்த விமான துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.

இந்நிலையில், டிசம்பர் இறுதி வரை காலியாக உள்ள ஜெட் ஏர்வேஸின் வழித்தடங்களை இதர உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் பயன்படுத்த விமான துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.