ஜூலை, ஆகஸ்டில் இரண்டாம் கட்ட கொரோனா தாக்குதல்! – எச்சரிக்கும் ஆய்வாளர்கள்
சீனாவின் வுகான் நகரில் ஏற்பட்ட கொரோனா தொற்று தற்போது உலகம் முழுக்க பரவி லட்சக் கணக்கில் உயிர்களை காவு வாங்கிவிட்டது. கொரோனா காரணமாக உலகமே வீடுகளுக்குள் முடங்கியுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்தியாவில் ஜூலை, ஆகஸ்டில் இரண்டாம் கட்டமாக கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் அரசுக்கு எச்சரக்கைவிடுத்துள்ளனர்.
சீனாவின் வுகான் நகரில் ஏற்பட்ட கொரோனா தொற்று தற்போது உலகம் முழுக்க பரவி லட்சக் கணக்கில் உயிர்களை காவு வாங்கிவிட்டது. கொரோனா காரணமாக உலகமே வீடுகளுக்குள் முடங்கியுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக கொரோனா தாக்கம் குறைந்தாலும் மீண்டும் ஜூலை, ஆகஸ்ட் மாதம் கொரோனா மிக வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஷிவ் நாடார் பல்கலைக் கழக பேராசிரியர் சமித் பட்டாச்சார்யா கூறுகையில், “இந்தியாவில் ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டாலும் ஒரு சில வாரங்களுக்குப் பிறகு கொரோனா தாக்கம் குறையும். ஆனால், ஜூலை, ஆகஸ்ட் மாதம் இரண்டாவது கட்டமாக தோன்றி பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இரண்டாம் கட்டத்தின்போது எந்த அளவுக்கு சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கிறோம் என்பதை பொறுத்துத்தான் கொரோனாவின் தாக்கம் இருக்கும்.
கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு பெரிய அளவுக்கு செல்லவில்லை என்பதை காண முடிகிறது. இது நாம் கொரோனாவின் உச்சத்தை தொட்டுவிட்டோம் என்பதையே காட்டுகிறது. சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுவது தெரியவந்துள்ளது. இதனால் எந்த அளவுக்கு கொரோனவுக்குப் பிறகு தோன்றிய நோய் எதிர்ப்பு சக்தி பயன் அளிக்கும் என்று தெரியவில்லை. எனவே, கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரையில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம்” என்றார்.