ஜி.சாட் 29 செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தம்!

 

ஜி.சாட் 29 செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தம்!

ஜி.எஸ்.எல்.வி மார்க்3 டி2 விண்கலம் சுமந்து சென்ற ஜி.சாட் 29 செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது

ஸ்ரீஹரிகோட்டா: ஜி.எஸ்.எல்.வி மார்க்3 டி2 விண்கலம் சுமந்து சென்ற ஜி.சாட் 29 செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த ஜிஎஸ்எல்வி – மார்க் 3 , டி- 2 என்ற ராக்கெட், 3 நிலைகளை கொண்ட ஒரு கனரக வகை ராக்கெட்டாகும். இதில் முதல் நிலைகளில் திட எரிபொருளும், 2-வது நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளன. 3-வது நிலையில் கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

10 டன் எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், 4 டன் எடை கொண்ட செயற்கைகோளை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தும் திறன் கொண்டது. தற்போது 3 ஆயிரத்து 423 கிலோ எடை கொண்ட ஜிசாட்-29 செயற்கைகோளை சுமந்து செல்கிறது.

வானிலை மாற்றம், கடல் சார் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஜி – சாட் 29 செயற்கைக்கோள் செலுத்தப்பட்டுள்ளது. தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்துள்ள இந்த செயற்கை கோள், பூமியில் இருந்து சுமார் 36,000 கி.மீ., தொலைவில் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.