ஜியோவில் ரூ.43,574 கோடி முதலீடு செய்யும் மார்க் ஜூகர்பெர்க்…. பேஸ்புக் நிறுவனத்துக்கு 10 சதவீத பங்குகளை கொடுக்கும் முகேஷ் அம்பானி….

 

ஜியோவில் ரூ.43,574 கோடி முதலீடு செய்யும் மார்க் ஜூகர்பெர்க்…. பேஸ்புக் நிறுவனத்துக்கு 10 சதவீத பங்குகளை கொடுக்கும் முகேஷ் அம்பானி….

பேஸ்புக் நிறுவனம் ஜியோவில் ரூ.43,574 கோடி முதலீடு செய்ய உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பேஸ்புக்கின் இந்த முதலீடு ஜியோவின் 9.99 சதவீத பங்குகளாக மாறும்

நம் நாட்டின் தகவல்தொடர்பு துறையின் வரலாற்றை மாற்றி எழுதிய நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. இந்திய தொலைத்தொடர்பு வரலாற்றை ஜி.மு. (ஜியோ வருகைக்கு முன்), ஜி.பி. (ஜியோ வருகைக்கு பின்) என இரண்டு கட்டங்களாக பிரிக்கலாம். ஜியோவின் வருகைக்கு பிறகு இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்தது, அழைப்பு கட்டணங்கள் கிட்டத்தட்ட இலவசம் என்ற நிலைக்கு சென்றது. ஜியோவின் வருகையால் பல சின்ன நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்துக்கு மூடுவிழா நடத்தின. ஜியோவின் போட்டியை சமாளித்து தற்போது ஏர்டெல், வோடோபோன் ஐடியா மற்றும் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். ஆகியவை மட்டுமே தொலைத்தொடர்பு துறையில் காலத்தை தள்ளி வருகின்றன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

18 மாதங்களில் கடனே இல்லாத நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மாறும் என கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார். இதற்காக தனது எண்ணெய் வர்த்தக பிரிவின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை சவுதியின் அராம்கோ நிறுவனத்துக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் இறங்கினார். தற்போது அது தாமதமாகி வருகிறது. இதற்கிடையே பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் ஜியோவின் 10 சதவீத பங்குகளை வாங்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் லாக்டவுனால்தான் இந்த நடவடிக்கை தாமதம் ஆவதாக செய்தி வெளியானது.

ஜியோ, பேஸ்புக்

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் ஜியோவில் ரூ.43,574 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பேஸ்புக்கின் முதலீடு ஜியோவில் 9.99 சதவீத பங்குகளாக மாறும். பேஸ்புக் நிறுவனம் ஜியோவில் மேற்கொள்ளும் முதலீடுதான் இந்திய தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய அன்னிய நேரடி முதலீடாக இருக்கும் என தெரிகிறது. இந்த பத்து சதவீத பங்கு விற்பனை வாயிலாக கிடைக்கும் பணத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடனை குறைக்க முகேஷ் அம்பானி பயன்படுத்துவார் எதிர்பார்க்கப்படுகிறது.