ஜம்மு-காஷ்மீர் வழக்குகள்: 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்!
அரசியல் நோக்கத்திற்காக யாரும் காஷ்மீர் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி: ஜம்மு- காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் பிரிவு 370 ஐ ரத்து செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது
ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் பிரிவு 370 ஐ ரத்து செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்.பி.க்கள் முகமது அக்பர் லோன், ஓய்வு பெற்ற நீதிபதி ஹஸ்னைன் மசூதி ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்விலிருந்து 5 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல் ஜம்மு காஷ்மீருக்கு சீதாராம் யெச்சூரி செல்வதற்கும் அனுமதி வழங்கியுள்ள நீதிமன்றம், இந்திய குடிமக்கள், நாட்டின் எந்தப் பகுதிக்குச் செல்லவேண்டும் என்றாலும் வழிவகை செய்வது அரசின் கடமை எனவும் உறவினர்கள், நண்பர்களை மட்டும்தான் சந்திக்க வேண்டும் எனவும் அரசியல் நோக்கத்திற்காக யாரும் காஷ்மீர் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இதே போல் முகமது ஜலீல் உள்ளிட்டோரும் தங்களது குடும்பத்தினரைப் பார்க்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் ஜம்மு- காஷ்மீரில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது பற்றி 7 நாட்களில் பதில் தர மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.