ஜனநாயக கடமையை நிறைவேற்றிய நடிகர்கள் அஜித், ரஜினிகாந்த்: புகைப்படம் உள்ளே!
நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்டோர் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் தங்கள் வாக்கை செலுத்தினர்.
சென்னை: நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்டோர் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் தங்கள் வாக்கை செலுத்தினர்.
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை சரியாக 7 மணிக்குத் தொடங்கியது. காலை முதலே மக்கள் ஆர்வமுடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வரிசையில் நின்று தங்கள் வாக்கைச் செலுத்திவிட்டுச் செல்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் அஜித் மனைவி ஷாலினியுடன் வந்து தனது வாக்கைச் செலுத்தினார். தென் சென்னைக்கு உட்பட்ட சென்னை திருவான்மியூரில் வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில், வாக்குச்சாவடிக்கு வந்த அஜித் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். பாதுகாப்பு கருதி அவர் வரிசையில் நிற்காமல் நேரடியாக வாக்குச்சாவடிக்குள் சென்றார். அப்போது நடிகர் அஜித்தை கண்ட அவரது ரசிகர்கள் அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைய முற்பட்டனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அதே போல் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கை சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் செலுத்தினார். வாக்குப்பதிவை முன்னிட்டு, அவர் நேற்று தர்பார் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு மும்பையிலிருந்து சென்னை வந்தார்.
அதனடிப்படையில் ரஜினியும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இதை தொடர்ந்து அவர் இன்று இரவே மும்பை புறப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்க: தமிழகம் , புதுச்சேரியில் தொடங்கியது வாக்குப்பதிவு!