செல்போன் திருடி விற்பனை செய்த பாடகர் கைது: அதிர வைக்கும் உண்மை சம்பவம்!

 

செல்போன் திருடி விற்பனை செய்த பாடகர் கைது: அதிர வைக்கும் உண்மை சம்பவம்!

செல்போன் திருட்டு விவகாரத்தில் சென்னையை சேர்ந்த பாடகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: செல்போன் திருட்டு விவகாரத்தில் சென்னையை சேர்ந்த பாடகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தியாகராய நகர், அசோக் நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தவர்களை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர். அப்போது திருட்டுப் போன செல்போன் ஒன்றின் ஐஇஎம்ஐ நம்பரை வைத்து அதைப் பயன்படுத்தியவரை காவல்துறையினர் பிடித்தனர். அவர் தியாகராய நகரில் உள்ள சத்யா பஜாரில் செல்போனை வாங்கியதாகக் கூறியிருக்கிறார். 

இதன் தொடர் விசாரணையில் கடைகளுக்கு இது போன்ற செல்போன்களை விற்கும்  மயிலாப்பூரில் உள்ள  அசார் அலியை காவல்துறையினர் கைது செய்தனர்.அவரிடம் இருந்து  15 செல்போன்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அசார் அலியின் கூட்டாளி விக்கி, ரஷீத் அகமது ஆகியோரை காவலர்கள் தேடி வருகின்றனர்.

மடிப்பாக்கத்தைச் சேர்ந்த  அசார் அலி, தியாகராய நகர் சத்யா பஜாரில் செல்போன் கடை நடத்தியும், கூடவே பார், கிளப் உள்ளிட்ட இடங்களில் பாடகராகவும் இருந்துள்ளார். திருட்டு செல்போன்களை வாங்கி விற்று காவல்துறையிடம் மாட்டிக் கொண்டதால் அவரது கடையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே கைது செய்யப்பட்ட அசார் அலி  வருமானத்திற்காக முழுநேர பாடகராக மாறியுள்ளார். ஆனால் அதில் கிடைத்த வருவாய் அவருக்கு போதவில்லை

முன்பே திருட்டு செல்போன் வாங்கி விற்ற அனுபவம் இருந்ததால், விக்கி என்பவரை துணைக்கு சேர்த்துக்கொண்டு செல்போன் பறிக்கத் தொடங்கியுள்ளார் அசார் அலி. திருட்டு போன்களை ரஷீத் அகமதுவிடமும் சத்யா பஜாரில் சில கடைகளிலும் விற்றுள்ளார். அதில் நல்ல லாபம் கிடைக்கவே, அதை வைத்து மடிப்பாக்கம் மற்றும் கண்ணமாப்பேட்டையில் வீடு வாங்கியிருக்கிறார்.இதுவரை 50 பேரிடம் செல்போன் பறித்ததாக அசார் அலி காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.