செல்போனில் ஆரோக்கிய சேது செயலி இருந்தால்தான் பெட்ரோல்… அப்புறம் லிட்டருக்கு ரூ.1 டிஸ்கவுண்ட்… ம.பி. பெட்ரோல் பம்ப் உரிமையாளர்…

 

செல்போனில் ஆரோக்கிய சேது செயலி இருந்தால்தான் பெட்ரோல்… அப்புறம் லிட்டருக்கு ரூ.1 டிஸ்கவுண்ட்… ம.பி. பெட்ரோல் பம்ப் உரிமையாளர்…

மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் பம்ப் உரிமையாளர் ஒருவர், தனது பம்பில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப வருபவர்கள் தங்களது மொபைல் ஆரோக்கிய சேது செயலி டவுன்லோட் செய்து இருப்பதை காட்டினால் மட்டுமே எரிபொருள் வழங்குகிறார். மேலும் அவர்கள் வாங்கும் பெட்ரோல் அல்லது டீசலுக்கு லிட்டருக்கு ரூ.1 வீதம் டிஸ்கவுண்ட் வழங்குகிறார். 

கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக ஆரோக்கிய சேது செயலியை கடந்த ஏப்ரலில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த செயலியை தானாக முன்வந்து பல கோடி பேர் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்தனர். மக்கள் ஆரோக்கிய சேது செயலியை தங்களது செல்போன்களில் டவுன்லோடு செய்ய மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. மேலும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை வைத்து விளம்பரமும் செய்து வருகிறது. ஆனால் மத்திய பிரதேசததில் பெட்ரோல் பம்ப் உரிமையாளர் சத்தம் இல்லாமல் மக்கள் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துவதை ஊக்குவித்து வருகிறார்.

ஆரோக்கிய சேது செயலி

மத்திய பிரதேசம் மாநிலம் நீமுக் மாவட்டத்தில் ராம்புரா கிராமத்தில் பெட்ரோல் பம்ப் நடத்தி வருபவர் தேவேந்திர ஜெயின். ஜெயின் தனது பெட்ரோல் பம்பில் எரிபொருள் நிரப்ப வரும் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போனில் ஆரோக்கிய செயலியை டவுன்லோட் செய்து இருப்பதை காட்டினால் மட்டுமே எரிபொருள் வழங்குகிறார். மேலும் அவர்கள் வாங்கும் பெட்ரோல் அல்லது டீசலுக்கு லிட்டருக்கு ஒரு ரூபாய் வீதம் டிஸ்கவுண்ட் வழங்குகிறார். தேவேந்திர ஜெயினின் இந்த திட்டம் மக்களை மட்டுமல்ல நகரத்தின் பிற விநியோகஸ்தர்களையும் ஆரோக்கிய சேது செயலிக்கு பயன்பாட்டுக்கு தள்ளும் என நம்பப்படுகிறது.

தேவேந்திர ஜெயின்

தேவேந்திர ஜெயின் இது குறித்து கூறியதாவது: எனது பம்புக்கு தினமும் ஏராளமான மக்கள் வருவார்கள். சமூக விலகல், ஹெல்மெட், முககவசம் மற்றும் சானிடைசர் பயன்பாடு மற்றும் இதர ஒவ்வொரு சாத்தியமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். ஆனால் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துமாறு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்ததை பார்த்த பிறகு அதற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தேன். அதன் முதல் படியாக, வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலில் ஆரோக்கிய சேது செயலியை இருப்பது காட்டினால் அவர்கள் நிரப்பும் எரிபொருளுக்கு லிட்டருக்கு ரூ.1 வீதம் தள்ளுபடி வழங்கப்படும். ஆரோக்கிய சேது செயலி போனில் இல்லையென்றால் பம்ப் பகுதியில் நுழைய வேண்டாம் என்று பேனர் ஒன்றை பம்பின் நுழைவு பகுதியில் வைத்தேன். 

பிரதமர் மோடி

எனது பம்பில் தினமும் சராசரியாக 3,500 லிட்டர் பெட்ரோலும், 6,000 லிட்டர் டீசலும் விற்பனையாகும். ஆரோக்கிய சேது செயலி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக தினமும் எனது சொந்த கமிஷனிலிருந்து ரூ.9,500 செலவிடுகிறேன். நான் எனது பாக்கெட்டிலிருந்து எவ்வளவு செலவிடுகிறேன் என்பது விஷயமல்ல. எனது நாடு கொரோனா வைரஸ் இல்லாத நாடாக மாறும் வரை இந்த திட்டத்தை தொடருவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். தேவேந்திர ஜெயினின் இந்த திட்டத்தை எல்லோரும் பாராட்டி வருகின்றனர். நீமுச் மாவட்ட கலெக்டர் ஜிதேந்திர ராஜே கூறுகையில், ஜெயின் தன்னை ஒரு ஊக்க தொழில்முனைவோராக வெளிப்படுத்துகிறார் என தெரிவித்தார்.