‘சென்னை எனக்கு பிடித்த ஊர் அதனால் தான் என் மகளை அனுப்பினேன்’ : பாத்திமா தந்தை
பாத்திமா செல்போனில் அவர் இறப்புக்கு 3 பேராசிரியர்கள் தான் காரணம் என்பது போல இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
கடந்த 8 ஆம் தேதி ஐஐடி கல்லூரியில் படித்து வந்து மாணவி, அக்கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் செல்போனில் அவர் இறப்புக்கு 3 பேராசிரியர்கள் தான் காரணம் என்பது போல இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
இந்த சம்பவத்தில் மத்திய குற்றப்பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. நேற்று டிஜிபி அலுவலகத்திற்கு சென்ற பாத்திமா தந்தை, தனது பெண்ணின் மரணத்தின் உண்மையான காரணத்தை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். அதனையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், திமுக தலைவர் ஸ்டாலினையும் சந்தித்து பேசினார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாத்திமா தந்தை, என் மகள் தற்கொலை செய்து கொண்டதை போல தெரியவில்லை. உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க ஊடங்கங்கள் எனக்கு உதவ வேண்டும் என்று கூறினார். அதனை தொடர்ந்து, நேற்று ஐஐடி பேராசிரியர்களிடம் விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் இன்று காலை பாத்திமாவின் தந்தையிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அப்துல் லத்தீப், “எனக்கு பிடித்த ஊர் சென்னை என்பதால் தான் பாத்திமாவை சென்னைக்கு அனுப்பினேன். குற்றப்பிரிவு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். அனைத்து ஆதாரத்தையும் காவல் துறையினரிடம் கொடுத்து விட்டோம். இனிமேல் பாத்திமா போல ஒரு பெண் கூட இறக்கக் கூடாது என்று வலியுறுத்தினோம். பாத்திமா மரணத்தில் இருக்கும் உண்மை விரைவில் வெளிவரும். அவள் இறப்பில் குற்றவாளி யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று காவல்துறை உறுதிஅளித்துள்ளது” என்று தெரிவித்தார்.