சென்னை உள்பட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களான தேனி, திண்டிவனம், தருமபுரி, பென்னாகரம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது
சென்னை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக அடையாறு, கோடம்பாக்கம், கோட்டூர்புரம், தேனாம்பேட்டை, பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதேபோல் வேளச்சேரி, அசோக்நகர், மதுரவாயல், வடபழனி போன்ற இடங்களிலும் மழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களான தேனி, திண்டிவனம், தருமபுரி, பென்னாகரம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. திருவள்ளூரில் மழை ஒருவர் பலியானதுடன் 5 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகச் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது.