சென்னையில் ரூ.1.75 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் – 5 பேர் கைது
சென்னை
சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயில் இருந்து இன்று சென்னைக்கு வந்த இ.கே.542 என்ற விமானத்தில் வந்த பயணிகளின், உடமைகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கு உரிய விதமாக இருந்த 5 பயணிகளை தனியாக அழைத்துச் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, பயணிகள் தங்கத்தை பசை வடிவில் மாற்றி ஆசனவாயில் மறைத்தும், உடைகளுக்குள் கட்டி வடிவிலும் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவர்களிடம் இருந்து 3 கிலோ 46 கிராம் அளவிலான 18 தங்கப்பசை உருளைகள் மற்றும் 6 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் சர்வதேச மதிப்பு ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், பயணிகள் சிலர் உடமைக்குள் மறைத்து கடத்திவந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் பழைய லேப்டாப்பையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இவற்றை கடத்தி வந்ததாக பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5 பயணிகளை கைது செய்த சுங்க அதிகாரிகள், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.