சென்னையில் போலீஸ் தரக்குறைவாக திட்டியதால் மனமுடைந்த கால் டாக்சி டிரைவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை!
போலீஸ் அவதூறாக பேசியதாக கூறி கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: போலீஸ் அவதூறாக பேசியதாக கூறி கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 25ம் தேதி மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே ரயில்முன் பாய்ந்து ராஜேஷ் என்ற கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கால்டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்தார். கடந்த 25ம் தேதி காலை சுமார் 8 மணியளவில் டிஎல்எப் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரை தனது காரில் ஏற்றிச் சென்றார்.
மற்றொரு ஊழியரை காரில் ஏற்ற வேண்டியிருந்ததால், அண்ணாநகர் பாடி மேம்பாலம் அருகே ராஜேஷ் காரை நிறுத்தினார். அப்போது அங்கே வந்த போலீசார், இவரை தகாத வார்த்தைகளால் பேசி, காரை அங்கேயிருந்து நகர்த்துமாறு திட்டியுள்ளனர். காரையும் பின்னால் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
பெண்மணி முன்பாக மிக கேவலமான வார்த்தைகளால் தன்னை போலீசார் திட்டியதால் மனமுடைந்த ராஜேஷ், செல்போனில், தற்கொலை செய்யப்போவதாக விடியோ எடுத்துவிட்டுதான் ரயில் முன்பு பாய்ந்துள்ளார். இதில் ராஜேஷ் தலைவேறு, உடல்வேறாக துண்டாகி பலியாகியுள்ளார்
தரமணியில் கடந்த வருடம் இதேபோல வாடகை கார் ஓட்டுநர் மணிகண்டன் என்பவரை போலீசார் தரக்குறைவாக பேசி தாக்கியதால் அவர் தீக்குளித்து தற்கொலை செய்தார். அந்த சம்பவத்தையும் ராஜேஷ் தனது விடியோவில் நினைவுகூர்ந்துள்ளார்.
அந்த சம்பவத்திற்கு பிறகும், காவல்துறை தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை. உயர் அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுப்பதில்லை எனவும், ராஜேஷ் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விடியோ வைரலாகியுள்ளது.