சென்னையில் பயங்கரம்: கணவனை அடித்து நகையை கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி கொடுத்த மனைவி!

 

சென்னையில் பயங்கரம்: கணவனை அடித்து நகையை கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி கொடுத்த மனைவி!

சென்னை : திருவான்மியூர் கடற்கரைக்குச்  சென்ற புதுமணத் தம்பதியை தாக்கி 12 சவரன் நகை மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், திடீர் திருப்பமாக புகார் கொடுத்த பெண்ணையே போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னையை  அடுத்த பல்லாவரத்தைச் சேர்ந்தவர் கதிரவன். அண்மையில் அனிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சென்னை திருவான்மியூர் வால்மீகி நகர் அருகே உள்ள கடற்கரைக்கு இருவரும் நேற்று சென்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், தம்பதியை வழிமறித்து நகைகளைப் பறிக்க முயன்றபோது, அவர்களுடன் போராடிய கணவர் கதிரவனை, தாக்கி 12 சவரன் தங்க நகைகளைப் பறித்து சென்றனர். 

இதில் காயமடைந்த கதிரவன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அனிதா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் போது அனிதா முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதில் முன்னாள் காதலனான அந்தோணிஜெகன் என்பவர் மூலமாகக் கொள்ளை சம்பவத்திற்கு அனிதாவே திட்டம் தீட்டியது தெரியவந்தது.

இதையடுத்து அனிதாவை கைது செய்த போலீசார், மதுரை விளாத்திகுளத்தில் பதுங்கியிருந்த அந்தோணிஜெகனையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.