சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது!

 

சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது!

சென்னையில் கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது

சென்னை: சென்னையில் கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

திருப்பதியில் வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி  முதல் 21-ந் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்டோபர் 9-ம்தேதி முதல் 18-ந் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெற உள்ளது. இதனை அடுத்து இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதிக்கு  திருக்குடை ஊர்வலம் எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 

tirupati

இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை ஊர்வலம் பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்னை கேசவ பெருமாள் கோவிலில் இருந்து இன்று மதியம் பூஜைகளுடன் புறப்பட்டது. திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தொடங்கி வைத்தார். 

ஊர்வலம் என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக மாலை 4 மணிக்கு யானைக்கவுனி தாண்டுகிறது.

tirupati

அதன் பின்னர் சால்ட் குவாட்டர்ஸ், செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, அயனாவரம் காசி விசுவநாதர் கோவில் சென்றடைகிறது.

நாளை  (12-ந்தேதி) ஐ.சி.எப்.. ஜி.கே.எம்.காலனி, திரு.வி.க.நகர், பெரம்பூர் வில்லிவாக்கம், சென்றடைகிறது. 13-ந்தேதி பாடி, அம்பத்தூர், திருமுல்லைவாயில் செல்கிறது. 14-ந்தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் சென்றடைகிறது.

 

15-ந்தேதி மணவாளநகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்று 16-ந்தேதி திருமலை செல்கிறது. அங்கு மாடவீதி வலம் வந்து வஸ்திரம் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜியர்கள் முன்னிலையில் திருப்பதி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் திருக்குடைகள் ஒப்படைக்கப்படுகிறது. 

இந்த நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா என்ற பக்தி கோ‌ஷங்களுடன் 11 திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.