சென்னையில் தாறுமாறாக காரை ஓட்டிய கல்லூரி மாணவனுக்கு தர்ம அடி!

 

சென்னையில் தாறுமாறாக காரை ஓட்டிய கல்லூரி மாணவனுக்கு தர்ம அடி!

சென்னை: சென்னையில் தாறுமாறாக காரை ஓட்டி சாலையில் நடந்து சென்றவர்கள் மீது ஏற்றிய கல்லூரி மாணவனை அங்கிருந்தவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

சென்னை வில்லிவாக்கம் அடுத்த ஐ.சி.எஃப் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த விஜயலட்சுமி மற்றும் அவரது உறவினரின் 6 வயது சிறுமி சிந்து ஆகியோர் மீது கார் ஒன்று மோதியது.

மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர், காரை ஓட்டி வந்த இளைஞனை சுற்றி வளைத்த பொதுமக்கள், சரமாரியாக அடித்து உதைத்தனர். இளைஞனை போலீசில் ஒப்படைத்து விடலாம் என்று சமாதானம் பேசி தடுக்க முயன்ற ஒருவருக்கும் சரமாரியாக அடி விழுந்துள்ளது.

இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் அங்கு வந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார், இளைஞனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் படிக்கும் சரண் என்பதும், இவரும் வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.