சென்னையின் பிரபல பிரியாணி கடைக்கு சீல்.. அதிகாரிகள் தெரிவித்த திடுக்கிடும் தகவல்கள்!
கிண்டியில் இயங்கி வந்த ஆசிஃப் பிரியாணி தயாரிக்கும் இடத்திற்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: கிண்டியில் இயங்கி வந்த ஆசிஃப் பிரியாணி தயாரிக்கும் இடத்திற்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசைவப் பிரியர்களின் விருப்ப உணவாக எப்போதும் இருப்பது பிரியாணி தான். அசைவம் என்று வந்துவிட்டாலே, பெரும்பாலானோரின் முதல் விருப்பத் தேர்வாக இருக்கும் பிரியாணியின் மவுஸ் கூடக் கூட, பிரியாணிகளுக்கான தேவைகளும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
அந்த வகையில் சென்னை முழுவதும் பல புகழ்பெற்ற பிரியாணி கடைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் பெரும்பாலான கடைகள் கிளை உணவகங்கள் மூலம் தங்களின் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் சென்னை முழுவதும் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வரும் ஆசிஃப் பிரியாணி உணவகத்தின், பிரியாணி தயாரிக்கும் இடம் கிண்டியில் இயங்கி வருகிறது.
அந்த இடத்தில் சுகாதாரமற்ற பிரியாணி தயாரிக்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்ததையடுத்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரி கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் இன்று பிற்பகல் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த இடத்தில், சுகாதாரமற்ற முறையில் பிரியாணி சமைக்கப்படுவது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த இடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.