“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா?” – அமமுக புகழேந்தி காட்டம்

 

“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா?” – அமமுக புகழேந்தி காட்டம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் இணைவதால் திமுகவிற்கு எந்த லாபமும் இல்லை என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் இணைவதால் திமுகவிற்கு எந்த லாபமும் இல்லை என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், அமமுக கட்சியின் மாநில அமைப்புச் செயலாளராகவும் இருந்த செந்தில் பாலாஜி, ஓரிரு நாட்களில் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டிடிவி தினகரிடம் ஏற்பட்ட மனக்கசப்பையடுத்து, திமுகவில் இணையும் முடிவுக்கு செந்தில் பாலாஜி வந்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

ஆ.ராசா மூலமாகவே அவர் திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசியதாகவும், இந்த இணைப்பு நாளை அல்லது நாளை மறுநாள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

senthil balaji

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமமுக முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான புகழேந்தி, “செந்தில் பாலாஜி போய்தான் திமுகவை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை இல்லை. செந்தில் பாலாஜி திமுகவில் இணைவார் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை. ஏனென்றால், கொங்குமண்டலத்தில் இருந்து சிலர் சசிகலாவிற்கு துரோகம் செய்திருந்தாலும் நான் துரோகம் செய்யமாட்டேன். அவ்வாறு ஒரு சூழ்நிலை வந்தால் நான் தூக்கில் தொங்கிவிடுவேன் என செந்தில் பாலாஜி கூறியுள்ளார். எனவே செந்தில் பாலாஜி துரோகமும் செய்யமாட்டார். தூக்கிலும் தொங்க மாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ttv

ஊடகங்களில் தன்னைப்பற்றி செய்திகள் வந்தாலும் விளக்கம் கொடுக்க மாட்டார் செந்தில் பாலாஜி. இது அவரது பிரவி குணம். துரோகத்தை எதிர்த்து வெளிவந்து மீண்டும் துரோகம் செய்தால் யாராக இருந்தாலும் காணாமல் போவார்கள். 

செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா? எல்லோருக்கும் சுதந்திரத்தை கொடுத்து அழகு பார்ப்பவராகவே தினகரனை பார்க்கிறேன். செந்தில் பாலாஜியை பெரிய நபராக நாம் ஏன் பேச வேண்டும். தலைமை, சின்னம், தலைவரை பொறுத்துதான் கட்சி வெற்றி பெறும். ஒரு தனி நபரை பொறுத்து அல்ல” என காட்டமாக தெரிவித்துள்ளார்.