செந்தில் பாலாஜிக்கு எதிராக மனு; சொந்த காசில் சூனியம் வைத்து கொண்ட பெண்!

 

செந்தில் பாலாஜிக்கு எதிராக மனு; சொந்த காசில் சூனியம் வைத்து கொண்ட பெண்!

தமிழகத்தில் விடுபட்ட அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதி சட்டப்பேரவைகளுக்கு வருகிற மே மாதம் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது

சென்னை: செந்தில் பாலாஜியின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தில் விடுபட்ட அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதி சட்டப்பேரவைகளுக்கு வருகிற மே மாதம் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில், அரவக்குறிச்சியில் திமுக சார்பில் வேட்பாளராக செந்தில் பாலஜி அறிவிக்கப்பட்டுள்ளார்.

senthil balaji

அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்த நிலையில், செந்தில்பாலாஜியின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, தேசிய மக்கள் சக்திக் கட்சியைச் சேர்ந்த ஏ.பி. கீதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டப் பேரவைக்கு பொதுத் தேர்தல் நடந்த போது, பணப்பட்டுவாடா காரணமாக, அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியின் ஊழல் நடவடிக்கைகளால் தான் கடந்த முறை அரவக்குறிச்சி தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்பதால், இம்முறை அவரது வேட்புமனுவை ஏற்கக் கூடாது. அவரை போட்டியிட அனுமதித்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும் என கூறியிருந்தார்.

chennai high court

இந்த வழக்கு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், கடந்த 2016-ஆம் ஆண்டு இதே கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்ததை மறைத்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாகக் கூறி மனுதாரருக்கு ரூ.30,000 அபராதம் விதித்ததுடன், அந்த தொகையை 15 நாட்களில் சிறார் நீதி நிதியத்துக்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.