சுபஸ்ரீ வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் நெஞ்சுவலியில் படுத்த அதிமுக முன்னாள் கவன்சிலர்!
அப்போது அந்த பெண்ணின் மீது தண்ணீர் லாரி ஒன்று மோதி சம்பவ இடத்திலேயே அநியாயமாக உயிரிழந்தார்.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சுபஸ்ரீ என்ற 22 வயது இளம்பெண், கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி, பள்ளிக்கரணை வழியாக தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் ஒன்று அந்த பெண் மீது சரிந்து விழுந்தது. இதனால் அப்பெண் சாலையில் தூக்கி வீசப்பட்டார். அப்போது அந்த பெண்ணின் மீது தண்ணீர் லாரி ஒன்று மோதி சம்பவ இடத்திலேயே அநியாயமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்த நிலையில் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன், லாரி ஓட்டுநர் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இதையடுத்து தற்போது இந்த வழக்கில் பரங்கிமலை போக்குவரத்து காவல் துறையினர் 18 சாட்சியங்களைக் கொண்டு, 155 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் குற்றப்பத்திரிகை நகலை பெற ஜெயகோபால் உள்ளிட்ட மூவரையும் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் சுபஸ்ரீ வழக்கானது ஆலந்தூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஸ்டார்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் ஜெயகோபால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மாறாக அவர் மருத்துவமனையில் நெஞ்சுவலிக்காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தரப்பில் கூறப்பட்டது. இதை கேட்ட மாஜிஸ்திரேட் 27ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.