சுத்த சைவத்துக்கு மாறும் நாடாளுமன்ற கேண்டீன்…….

 

சுத்த சைவத்துக்கு மாறும் நாடாளுமன்ற கேண்டீன்…….

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கேண்டீன் விரைவில் சுத்த சைவ உணவமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கேண்டீனை தற்போது ரயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி. நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக நாடாளுமன்ற கேண்டீனில் ஐ.ஆர்.சி.டி.சி. வழங்கும் உணவின் தரம் குறித்து கவலை எழுந்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் நாடாளுமன்ற கேண்டீனை விட்டு வெளியேறும்படி ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் சொல்லப்படலாம் என தெரிகிறது.

நாடாளுமன்றம்

இதனால் நாடாளுமன்ற வளாக கேண்டீனை நடத்த புதிய ஆட்களுக்கான தேவை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் கேண்டீன் நடத்துவதற்கான போட்டியில் தற்போது தனியார் நிறுவனங்களான பிகேனர்வாலா, ஹால்டிராம் மற்றும் அரசு நிறுவனமான ஐ.டி.டி.சி. ஆகியவை உள்ளன. இருப்பினும், தனியார் நிறுவனங்களில் இரண்டில் ஒன்றுதான் நாடாளுமன்ற கேண்டீனை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபாநாயகர் ஓம் பிர்லா

நாடாளுமன்ற கேண்டீனில் தற்போது பிரியாணி, சிக்கன் கட்லெட், மீன் மற்றும் சிப்ஸ் பிரபலமான உணவுகளாகும். அதேசமயம் உப்புமா,  பொங்கல், பழங்கள் மற்றும் ஜூஸ்கள் போன்ற வகைகள் கிடைக்கும். ஆனால், பிகேனர்வாலா அல்லது ஹால்டிராம் நிறுவனங்களில் எந்த நிறுவனம் நாடாளுமன்ற கேண்டீனை நடத்தினால், கேண்டீன் உணவு பட்டியலில் முழுக்க சைவ உணவுகளை இடம் பெறும்.  ஏனென்றால் இந்த நிறுவனங்கள் தொடக்கம் முதலே சைவ உணவுகள் மட்டுமே வழங்கி வருகின்றன. அதனால் விரைவில் நாடாளுமன்ற கேண்டீன் சுத்த சைவ உணவமாக மாறும் என  எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், புதிய கேண்டீன் பொறுப்பாளரை தேர்ந்தெடுப்பது குறித்து மக்களவை சபாநாயகர்தான் ஓம் பிர்லாதான் இறுதி முடிவு எடுப்பார் என தெரிகிறது.