சுசீலாவுக்கு ரசிகர் நடத்தும் பிரம்மாண்ட பாராட்டு விழா!

 

சுசீலாவுக்கு ரசிகர் நடத்தும் பிரம்மாண்ட பாராட்டு விழா!

சினிமாவில் 65 ஆண்டுகளை கடந்த பாடகி சுசீலாவுக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்த முடிவு செய்துள்ளனர்.

சென்னை: சினிமாவில் 65 ஆண்டுகளை கடந்த பாடகி சுசீலாவுக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்த முடிவு செய்துள்ளனர்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழாவை கல்லூரிகள் கொண்டாடி வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள பல கல்லூரிகள் அவருக்கு அழைப்பு விடுத்தனர். அந்த வகையில் தற்போது பாடகி சுசீலாவிற்கும் விழா ஏற்பாடு செய்துள்ளனர். 

தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டு இருந்த சுசீலா  தமிழ்மொழியில்1953 -ல் ‘பெற்றதாய்’ படத்தில் பாடகியாக அறிமுகமானார். சிட்டுக்குருவிகள் இன்று அழிந்து போனாலும் அவர் பாடிய ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’ பாடலும் பாடலில் அவர் காட்டிய மேஜிக் குரலும் ஒருக்காலும் அழியாது. 

psuseela

அதைத்தொடர்ந்து மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, தமிழுக்கு அமுதென்று பேர் போன்ற மறக்க முடியாத பாடல்கள் உள்பட இந்திய மொழிகளில் மொத்தம் 25,000கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 

அவர் பாடிய பாடல்களுக்கான அங்கீகாரமாக மத்திய அரசு பத்மபூசன் விருது வழங்கியது. மேலும் 5 முறை தேசிய விருதுகளையும், 11 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி தென்னிந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார். 

p susheela

இந்நிலையில் சினிமாவிற்கு வந்து 65 வருடங்களை கடந்துவிட்ட நிலையில், அவருக்கு தற்போது வயது 84. ஆனால் இன்னும் குன்றாத இளமையுடன் இருக்கிறது அவரது புகழும், அவரின் தமிழும். அப்படிப்பட்ட சாதனைப் பாடகி சுசீலா அவர்களுக்கு லயா மீடியா சார்பாக அதி தீவிர ரசிகர் ஒருவர் வீரசேகர் மிகப்பெரிய பாராட்டு விழா நடத்த இருக்கிறார். 

மே மாதம் 19-ஆம் தேதி அன்று சென்னை பல்கலைகழக நூற்றாண்டு கலையரங்கத்தில் நடைபெறும் இவ்விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும், பெரும் ஆளுமைகள் பலரும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இசை பேரரசிக்கு மகுடம் சூட்டும் இந்த விழா ரசிகர்களின் வருகையாலும், வாழ்த்துகளாலும் மாபெரும் இசை திருவிழாவாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.