சில்லரை விலை பணவீக்கம் கிடுகிடு உயர்வு! இன்னும் கொஞ்ச நாளைக்கு கடனுக்கான வட்டி குறையவாய்ப்பில்லை

 

சில்லரை விலை பணவீக்கம் கிடுகிடு உயர்வு! இன்னும் கொஞ்ச நாளைக்கு கடனுக்கான வட்டி குறையவாய்ப்பில்லை

கடந்த டிசம்பரில் சில்லரை விலை பணவீக்கம் ஐந்தரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.35 சதவீதமாக உயர்ந்தது. இதனால் இன்னும் கொஞ்சம் நாளைக்கு ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைப்பதற்கு வாய்ப்பில்லை என தெரிகிறது.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில்தான் முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி முடிவு செய்யும். வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் போது சில்லரை விலை பணவீக்கத்தை கணக்கில் கொண்டு ரிசர்வ் வங்கி முடிவுகள் எடுக்கும். ரிசர்வ் வங்கி சில்லரை விலை பணவீக்கத்தை 4 சதவீதத்துக்குள் வைத்திருக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அதேசமயம் சில்லரை விலை பணவீக்கம் கட்டுபாட்டு இலக்கை காட்டிலும் 2 சதவீதம் கூடலாம் அல்லது குறையலாம்.

உணவு பொருட்கள் விலை உயர்வு

இந்நிலையில் கடந்த டிசம்பரில் சில்லரை விலை பணவீக்கம் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.35 சதவீதமாக உயர்ந்தது. மேலும் ரிசர்வ் நிர்ணயித்துள்ள அதிகபட்ச கட்டுப்பாட்டை இலக்கை காட்டிலும் சில்லரைவிலை பணவீக்கம் உயர்ந்துள்ளது. உணவு பொருட்களின் விலை உயர்ந்ததே சில்லரை விலை பணவீக்கம் உயர்வுக்கு முக்கிய காரணம்.

இந்திய ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி கடந்த டிசம்பர் மாத நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தின்போது, முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. எதிர்பார்த்ததை காட்டிலும் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை என ரிசர்வ் வங்கி காரணம் தெரிவித்தது. தற்போது அதிகபட்ச கட்டுப்பாட்டு இலக்கை காட்டிலும் சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்துள்ளதால், அடுத்த மாதம் நடைபெற உள்ள ரிசர்வ வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தின்போது முக்கிய கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் மங்கி விட்டது.