சிலை கடத்தல் தொடர்பான எஞ்சியுள்ள ஆவணங்களை ஒப்படைக்கப் பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவு !

 

சிலை கடத்தல் தொடர்பான எஞ்சியுள்ள ஆவணங்களை ஒப்படைக்கப் பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவு !

உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) தன்னிடம் இருந்த 17,790 பக்க, சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களைப் பொன்.மாணிக்கவேல் தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேலின் பதவிக்காலம் கடந்த நவம்பர் 30 ஆம் தேதியோடு முடிந்தது. அதனால், சிலை கடத்தல் தொடர்பாக அவரிடம் இருக்கும் அனைத்து கோப்புகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய் குமார் சிங்கிடம்  ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் தான் என்னைச் சிறப்புச் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமித்ததால், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்காமல் ஆவணங்களைத் தர முடியாது என்று தெரிவித்தார். 

ttn

அதன் பின், ஆவணங்களை ஒப்படைக்கும் படி கடந்த 2 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து, பொன்.மாணிக்கவேல் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பணிகள் நிறைவடைந்ததும் சி.டி வடிவில் சமர்ப்பிக்கிறேன் என்று தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவின் படி அவர் ஆவணங்களை ஒப்படைக்காததால் அவர் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

ttn

கடந்த 9 ஆம் தேதி அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், ஒரு வாரத்திற்குள் சிலை கடத்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும்  பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டு, வழக்கை 16 ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

ttn

உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) தன்னிடம் இருந்த 17,790 பக்க, சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களைப் பொன்.மாணிக்கவேல் தமிழக அரசிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், சிலைகள் தொடர்பான 50 தொன்மை சான்றுகள் ஒப்படைக்கப்படவில்லை என்று தமிழக அரசு புகார் அளித்தது. அதனை விசாரித்த நீதிபதிகள் எஞ்சியுள்ள ஆவணங்களை இன்னும் 2 வாரக் கால அவகாசத்திற்குள் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.