சினிமா, சீரியல் ஷூட்டிங் எடுக்க அனுமதி தாருங்கள் : ஆர். கே. செல்வமணி கோரிக்கை!

 

சினிமா, சீரியல் ஷூட்டிங் எடுக்க அனுமதி தாருங்கள் : ஆர். கே. செல்வமணி கோரிக்கை!

இந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் பொதுமுடக்கம் மே 4 முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  அதன்படி மே 17 ஆம் தேதி வரை  ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு தளர்வுகள் அந்தந்த மாநிலங்களை பொறுத்து மாறுபடும் என்று  அறிவிக்கபட்டது.  இதனையடுத்து தமிழக முதல்வர் பழனிசாமி தளர்வுகள் குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. 

இதுகுறித்து பெஃப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே செல்வமணி வெளியிட்டுள்ள  அறிக்கையில், “தமிழகத்தில் ஊரடங்கு சட்டம் போடப்பட்டு 50 நாட்களை தொட இருக்கிறோம். கொரோனா வைரஸ் பாதிப்பினை கருதி மத்திய, மாநில அரசுகள் ஊடரங்கு அறிவிப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பே தமிழ் திரைப்படத்துறையின் அனைத்து வேலைகளையும் நிறுத்தி ஏறக்குறைய இன்றோடு 50 வது நாளை கடக்க உள்ளோம். வெற்றிகரமான 100 நாள், வெள்ளி விழா, பொன் விழா என திரைப்பட வெற்றிகளை சந்தோஷமாக கொண்டாடிய திரைப்படத்துறை வேலை முடக்கப்பட்ட 50-வது நாள் என்று அறிவிக்கக் கூடிய துர்பாக்கியமான சூழ்நிலையில் உள்ளோம்.

rr

தமிழ்த்திரைப்பட துறையினர் நல வாரியம் மூலம் ரூ.1000, தமிழ் திரைப்பட கலைஞர்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடை வழியாக ரூ.1500-க்கான உணவு பொருள்களும், அமிதாப் பச்சன் மூலம் சோனி டிவி மற்றும் கல்யாண் ஜுவல்லரி வழங்கிய ரூ.1500 மதிப்பிலான உணவுப் பொருள்களும் ஏறக்குறைய ரூ.4000 ரூபாய்க்கான உணவுப் பொருள்களை வைத்து இந்த 40 நாள் வேலை முடக்கத்தில் பசிப்பிணியில் இருந்து எங்கள் தொழிலாளர்களை உயிரோடு காப்பாற்றி உள்ளோம்.

tt

இனியும் வேலை முடக்கம் நீட்டிக்கப்பட்டால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்த தொழிலாளர்கள் பசிப்பிணியில் பட்டினி சாவுகளை எதிர்நோக்க வேண்டிய அபாயகரமான சூழ்நிலையில் உள்ளார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது 17 தொழில்துறைகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியிருப்பதைப் போல் திரைப்படத்துறைக்கும், தொலைக்காட்சிகளுக்கும் நிபந்தனைகளோடு அனுமதி வழங்கிடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.குறைந்தபட்சம் திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு அல்லாத பணிகளான ரெக்கார்டிங், ரீ – ரெக்கார்டிங், டப்பிங் போன்ற போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கும் தொலைக்காட்சி படப்பிடிப்பிற்கும் அனுமதி வழங்கினால் சம்மேளனத்தின் 40, 50 சதவிகித தொழிலாளர்கள் வேலை செய்யக் கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் அவர்கள் பட்டினி சாவிலிருந்து தப்பிக்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த பணிகளை சமூக இடைவெளியுடன் பணிசெய்ய வைக்க இயலும் என்பதால் திரைப்படங்களுக்கு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கும் மற்றும் தொலைக்காட்சி பணிகளுக்குமான அனுமதி வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். மத்திய, மாநில அரசுகள் விதிக்கின்ற அனைத்து கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் ஏற்று இந்த பணிகளை சமூக இடைவெளியுடன் மருத்துவ பாதுகாப்புகளுடன் சுகாதாரமான முறையில் இந்த பணிகளை செய்வோம் என்று உறுதி அளிக்கின்றோம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.