சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்!

 

 சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்!

சிதம்பரம் நடராஜர்கோயிலில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் :

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் இந்தாண்டிற்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 14 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது.

natrarajar temple

ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசன விழாவிற்கு முதல் நாள் இக்கோயிலில் தேரோட்டம் நடைபெறும். அதே போல் இந்த ஆண்டிற்கான தேரோட்டம்  இன்று காலை நடைபெற்றது.

தேரோட்ட நிகழ்வினை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் சாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதன் பின்னர் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேரில் சாமிகள் எழுந்தருளினர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையிலும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளான 4 வீதிகளிலும் வலம் வந்தது. 

இந்த தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வெளி ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் மழையில் நனைந்தபடி சாமி தரிசனம் செய்தனர். மேலும் விழாவின் சிகரநிகழ்ச்சியான ஆருத்ர தரிசனம் நாளை நடைபெறுகிறது.

natarajar temple

ஆருத்ர தரிசன விழாவிற்கு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்க படுவதால் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் மட்டுமின்றி வாகனங்கள் நிறுத்தி வைக்க இட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இவ்விழாவினை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.