’சிங்காரவேலு  ஆணைய அறிக்கையைத் தமிழக அரசு ஒளித்துவைக்கவேண்டிய காரணம் என்ன?’…திருமாவளவன் கேள்வி…

 

’சிங்காரவேலு  ஆணைய அறிக்கையைத் தமிழக அரசு ஒளித்துவைக்கவேண்டிய காரணம் என்ன?’…திருமாவளவன் கேள்வி…

”தமிழக மக்களின் பயத்தைப் போக்கவும் குழப்பத்தை தீர்க்கவும் சிங்காரவேலு ஆணையத்தின் முழுமையான அறிக்கையைக் காலந்தாழ்த்தாமல் தமிழக அரசு வெளியிட வேண்டும்”என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். 

”தமிழக மக்களின் பயத்தைப் போக்கவும் குழப்பத்தை தீர்க்கவும் சிங்காரவேலு ஆணையத்தின் முழுமையான அறிக்கையைக் காலந்தாழ்த்தாமல் தமிழக அரசு வெளியிட வேண்டும்”என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தர்மபுரி இளவரசன் மரணம் குறித்து விசாரிப்பதற்கு 2013ஆம் ஆண்டு தமிழக அரசால்  அமைக்கப்பட்ட நீதிபதி சிங்காரவேலு விசாரணை ஆணைய அறிக்கையை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும்.  அந்த அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப்  பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

தர்மபுரி நத்தம் காலனியைச் சேர்ந்த தலித் இளைஞன் இளவரசன் அதே ஊரைச் சேர்ந்த திவ்யா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அதையொட்டி மிகப்பெரிய கலவரம் ஒரு அரசியல் கட்சியால் தூண்டி விடப்பட்டு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த சம்பவத்திற்குப் பிறகு இளவரசன் மர்மமான முறையில் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் இறந்து கிடந்தார். அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் எனக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது ஆனால் அவரது உடலை நேரில் பார்த்தவர்கள் அது தற்கொலையாக இருப்பதற்கு வாய்ப்பில்லை,  அவர் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தை  எழுப்பினர். அவரது தந்தையும் இளவரசன் மரணம் குறித்து விசாரணை வேண்டும் என வலியுறுத்தினார். 

அதனடிப்படையில். அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் நீதிபதி சிங்காரவேலு ஆணையம் அமைக்கப்பட்டது. அது 5 ஆண்டுகள் விசாரணை செய்து 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.  அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு. ஒன்பது மாதங்கள் கடந்த பிறகும் தமிழக அரசு அதை வெளியிடவில்லை. அந்த அறிக்கையின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்க வில்லை. 

 இந்நிலையில் ஆங்கில ஏடான ஃபிரண்ட்லைன் அந்த அறிக்கையின் இறுதிப் பகுதியை வெளியிட்டிருக்கிறது. அதைப்  பார்த்து பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களுக்காகக் குரல் எழுப்பிய ஜனநாயக சக்திகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

சிங்காரவேலு ஆணையத்தின் முழுமையான அறிக்கையைப் பொதுமக்களுக்கு வெளியிடாமல் தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பதற்குக் காரணம் என்ன ? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே மக்களின் பயத்தைப் போக்கவும் குழப்பத்தை தீர்க்கவும் சிங்காரவேலு ஆணையத்தின் முழுமையான அறிக்கையைக் காலந்தாழ்த்தாமல் தமிழக அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். அந்த அறிக்கையின் பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்  எவை என்பதையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்

’என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் திருமாவளவன்.