சிஏஏ-க்கு எதிராக பேரணி…திருமாவளவன், ஜோதிமணி உள்ளிட்ட 3000 பேர் மீது வழக்கு!
அனுமதியின்றி பேரணி நடத்தியதாக திருமாவளவன், ஜோதிமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி பேரணி நடத்தியதாக திருமாவளவன், ஜோதிமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புத்தாந்தம் ஜமாத் சார்பில் கடந்த 24-ந் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருச்சி மாவட்டம் புத்தா நத்தத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிதம்பரம் எம்பி திருமாவளவன், கரூர் எம்.பி. ஜோதிமணி, மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, திமுக மாநில மகளிரணி துணை செயலாளர் கவிஞர் சல்மா, ஜமாத் தலைவர் ரகமத்துல்லா உள்ளிட்ட 3 ஆயிரம் பேர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து எந்த முன் அனுமதியும் வாங்காமல் பேரணி நடத்தியதுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடையூறு தந்தாக கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பேரணியில் கலந்து கொண்ட திருமாவளவன், ஜோதிமணி உள்ளிட்ட 3,000 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143, 341, 188 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .