சிஏஏவை திரும்பப் பெறவில்லை என்றால் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அமமுகவும் களமிறங்கும் : டிடிவி தினகரன்
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்னை வண்ணார பேட்டையில் போராட்டம் நடத்தி வந்தனர்.
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்னை வண்ணார பேட்டையில் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் ஒருவர் உயிரிழந்து விட்டார் என்று தகவல்கள் வெளியானது. இதனையடுத்து அந்த போராட்டம் இன்னும் வலுப்பெற்றது.
இது குறித்து நேற்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உரிய அனுமதி இல்லாமல் வண்ணார பேட்டையில் போராட்டம் நடைபெற்று வருவதாகவும் அதனைத் தடுக்க சென்ற காவலர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்களின் வாகனங்கள் உள்ளிட்டவற்றைப் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியதாகவும் கூறினார். மேலும், காவலர் அடித்ததால் ஒருவர் உயிரிழக்க வில்லை என்றும் இயற்கையாக ஒருவர் உயிரிழந்தது குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால் தான் போராட்டம் நடைபெற்றது என்றும் ஒரு சில சக்திகளின் தூண்டுதல் காரணமாகத் தான் போராட்டம் நடைபெற்று வருவதாகவும் கூறினார். முதல்வர் இவ்வாறு கூறியது எதிர்க்கட்சியினரிடையே எதிர்ப்பை கிளப்பியது.
இந்நிலையில் வண்ணார பேட்டை போராட்டம் குறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “மதத்தின் அடிப்படையில் சட்டம் இயக்கியதால் தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மதத்தின் அடிப்படையில் சட்டம் கொண்டுவருவது தவறு. குடியுரிமை சட்டத்திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறாவிடில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அமமுகவும் போராட்டத்தில் களமிறங்கும். வண்ணாரபேட்டை போராட்டத்தில் பொது அமைதியை பாதுகாக்க வேண்டிய இதனை முறையாகக் கையாளவில்லை” என்று கூறினார்.