சாலை விபத்தில் அமைச்சர் ஜெயக்குமார் உதவியாளர் மரணம்: 2 மகன்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 

சாலை விபத்தில் அமைச்சர் ஜெயக்குமார் உதவியாளர் மரணம்: 2 மகன்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த பரிதாபம்!

வேப்பூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர் லோகநாதன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடலூர்: வேப்பூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர் லோகநாதன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கரூரில் இருந்து சென்னை நோக்கி, அமைச்சர் ஜெயக்குமார் உதவியாளர் லோகநாதன் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே சாலையில், முன்னாள் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென இடதுபுறமாக திரும்பியுள்ளது. இண்டிகேட்டரை இயக்காமலும், சமிஞ்சை செய்யாமலும் அரசுப் பேருந்தை, ஓட்டுநர் திருப்பியதாக கூறப்படுகிறது. அப்போது பின்புறம் அதிவேகமாக வந்த லோகநாதனின் கார், அரசுப் பேருந்தின் மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளது.

loganathan

இந்த கோர விபத்தில் அமைச்சரின் உதவியாளர் லோகநாதன், அவரது மகன்கள் சிவராமன், ரித்திஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த லோகநாதனின் மனைவி ஷாலினி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதே காரில் பயணித்த லோகநாதனின் 2 வயது மகன் ரக்சன் எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பினார். மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.