சாமி சிலைக்கு பட்டை நாமம், செருப்பு மாலை : மர்ம நபர்கள் அட்டகாசம்!
மர்ம நபர்கள் சிலர் முனியப்ப சுவாமி சிலையின் முகத்தில் பட்டையாக நாமம் அடித்து, செருப்பு மாலை அணிவித்திருந்தனர்.
தருமபுரி : சாமி சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ளது கூத்தப்பாடி கிராமம். இங்கு பழமைவாய்ந்த முனியப்பன் சுவாமி கோயில் உள்ளது. அப்பகுதி மக்கள் முனியப்பன் சுவாமியை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். அந்த வகையில் ஆண்டுதோறும் முனியப்ப சுவாமிக்கு 2ஆயிரம் களி உருண்டைகள் படைத்து மழைவேண்டி விழா எடுப்பது வழக்கம்.
இந்நிலையில் விழாவானது இன்று நடைபெறவிருந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் முனியப்ப சுவாமி சிலையின் முகத்தில் பட்டையாக நாமம் அடித்து, செருப்பு மாலை அணிவித்திருந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள், இதுபோன்ற அசம்பாவிதத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஏரியூர் – பென்னாகரம் சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.