சாதி ஆணவத்தின் வெறியாட்டம்; மருமகன், மகளைக் கொன்று காவிரியில் வீசிய தந்தை

 

சாதி ஆணவத்தின் வெறியாட்டம்; மருமகன், மகளைக் கொன்று காவிரியில் வீசிய தந்தை

பெற்ற மகளையும், அவரது கணவரையும் தந்தையே கொலை செய்து காவிரியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி: பெற்ற மகளையும், அவரது கணவரையும் தந்தையே கொலை செய்து காவிரியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் – சூளகிரி அருகே உள்ள சூடுகொண்ட பள்ளி வெங்கடேஷபுரத்தைச் சேர்ந்தவர் நத்தீஷ். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் வீட்டருகே உள்ள ஹார்டுவேர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தபோது இவருக்கும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த சுவாதி என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

இந்த காதல் விவகாரம் குறித்து சுவாதியின் வீட்டிற்கு தெரிய வந்ததையடுத்து, மிகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. அந்த எதிர்ப்புகளை மீறி காதலர்கள் இருவரும் திருமணம்  செய்து கொண்டு, ஓசூர் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதி முதல் நந்தீஷை காணவில்லை என அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், போலீசார் சோதனை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே காவிரி ஆற்றங்கரையோரம் அழுகிய நிலையில் காதல் ஜோடியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெற்ற மகளையும், மருகனையும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டு சுவாதியின் தந்தை வெங்கடேசன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சாதி ஆணவ வக்கிரத்தின் உச்சமாக பார்க்கப்படும் இந்த படுகொலை, பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.