சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தலாம்…….. நிதிஷ் குமார் கருத்து…..

 

சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தலாம்…….. நிதிஷ் குமார் கருத்து…..

சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தலாம் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்

பீகாரில் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ.க. கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இன்று அம்மாநில சட்டப்பேரவையில்  முதல்வர் நிதிஷ் குமார் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டம் உள்பட தற்போது நாட்டில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் (போராட்டங்கள்) குறித்து நாம் விவாதம் நடத்துவோம். பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து கேள்விக்கே இடமில்லை. அது அசாமில் மட்டுமே விவாதிக்கப்பட்டது. 

தேசிய குடிமக்கள் பதிவேடு

பிரதமர் நரேந்திர மோடியும் ஏற்கனவே அது குறித்து தெளிவுப்படுத்தி விட்டார். சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தலாம் என நாங்கள் கருதுகிறோம். இதற்கு முன் 1930ல் சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மீண்டும் அதுபோல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள்

மத்தியில் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க. அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை எந்தவிலையேனும் அமல்படுத்தியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இந்த சூழ்நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள நிதிஷ் குமார் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என கூறியிருப்பது கூட்டணியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.