சலுகைகளை அள்ளி வழங்கியதால் சிக்கி கொண்ட பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள்

 

சலுகைகளை அள்ளி வழங்கியதால் சிக்கி கொண்ட பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள்

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் பண்டிகை கால சிறப்பு விற்பனையில் அதிரடி சலுகைகள் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சகம் விசாரிக்க தொடங்கியுள்ளது.

ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது நம்மவர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இருந்த இடத்திலேயே பல விதமான பொருட்களை தேர்வு செய்து கொள்ளும் வசதி மற்றும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அளிக்கும் தள்ளுபடி சலுகை போன்றவையே இதற்கு காரணம். ஆன்லைன் நிறுவனங்களும் தங்களது விற்பனையை அதிகரிக்க பண்டிகை கால சிறப்பு விற்பனையை நடத்தி நல்ல காசு பார்த்து விடுகின்றன. 

அமேசான்

அதேசமயம் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் அதிரடி சலுகைகளால் வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பிளிப்கார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் மற்றவர்களை நசுக்கும் அதிரடி சலுகைகளை மற்றும் மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக ஆய்வு செய்யும்படி மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு எழுதிய கடிதத்தில் அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சி.ஏ.ஐ.டி.) வலியுறுத்தியது.

பியூஸ் கோயல்

இது தொடர்பாக மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறுகையில், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு சலுகைகள் அல்லது மற்றவர்களை நசுக்கும் வகையில் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய உரிமை கிடையாது. மேலும் அந்த நிறுவனங்கள் தங்களது பொருட்களை அதில் விற்பனை செய்ய கூடாது. அவை விற்பனையாளர்களை வாடிக்கையாளர்களுடன் இணைக்க மட்டுமே உதவுவதாக இருக்க வேண்டும். பிளிப்கார்ட், அமேசான் பண்டிகை கால சலுகை விற்பனை தொடர்பாக அரசு விசாரணை செய்து வருகிறது. அந்நிறுவனங்கள் விதிமுறை மீறி செயல்பட்டது உறுதியானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவித்தார்.