சர்வாதிகாரம் மற்றும் இனவெறி சித்தாந்தத்தை கடைபிடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.- இம்ரான் கான் குற்றஞ்சாட்டு

 

சர்வாதிகாரம் மற்றும் இனவெறி சித்தாந்தத்தை கடைபிடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.- இம்ரான் கான் குற்றஞ்சாட்டு

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் முதலில் போரை தொடங்காது. சர்வாதிகாரம் மற்றும் இனவெறி சித்தாந்தத்தை ஆர்.எஸ்.எஸ். கடைப்பிடிக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

சிறப்பு அந்தஸ்து நீக்கம் உள்ளிட்ட காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது. ஆனால் சீனாவை தவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஒரு துளி கூட ஆதரவு கொடுக்கவில்லை. காஷ்மீர் விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியாவுடான வர்த்தக உறவை பாகிஸ்தான் துண்டித்து கொண்டது. மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்துவோம் என்பது மாதிரி கடந்த சில தினங்களுக்கு முன் பேசி இருந்தார்.

ஆர்.எஸ்.எஸ்.

ஆனால் தற்போது அதற்கு எதிர்மாறாக பேசி இருக்கிறார். பாகிஸ்தானின் லாகூரில் முதல் சர்வதேச சீக்கிய மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் இம்ரான் கான் பேசுகையில், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கியதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்காக இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதத்தை அல்லது ராணுவ நடவடிக்கைகளை பாகிஸ்தான் முதலில் மேற்கொள்ளாது. இரண்டு நாடுகளும் அணு ஆயுதம் கொண்டவை. பதற்றம் அதிகரித்தால் உலகுக்கு பெரிய ஆபத்தாக மாறிவிடும்.

போரால் பிரச்சினை தீர்க்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி யாரும் யோசித்தாலும் அது விவேகமானதல்ல. நீங்க யுத்தத்தால் ஒரு பிரச்சினையை தீர்த்தால் அதன் மூலம் 4 பிரச்சினையை உருவாக்குவீர்கள். ஒவ்வொருவரும் போரால் பிரச்சினை தீர்க்க முயற்சி செய்தால் வெற்றியை கூட இழப்பார்கள். யுத்தத்தால் ஏற்படும் இழப்பை சரி செய்ய பல ஆண்டுகளாகும்.

அணு ஆயுதம்

ஆர்.எஸ்.எஸ். சர்வாதிகாரம் மற்றும் இனவெறி சித்தாந்தத்தை கடைப்பிடிக்கிறது. அது எந்த மதத்துக்கும் எதிரானது. தற்போதை காஷ்மீர் நிலவரத்தை மனிதநேயம் கொண்ட எவராலும் சகித்து கொள்ள முடியாது. கடந்த 27 நாட்களாக 80 லட்சம் மக்கள் அடைக்கப்பட்டு மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் முஸ்லிம் இல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களுக்காக நான் குரல் கொடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.