சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியல்: மசூத் அசாரை சேர்க்க, தடையாக நின்ற சீனா
ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது
நியூயார்க்: ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது.
புல்வாமா தாக்குதல்:
கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றது. இதையடுத்து இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டன குரல் எழுப்பினர்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா கோரிக்கை:
இதை தொடர்ந்து, புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
முட்டுக்கட்டை போட்ட சீனா:
இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பல நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கத் தயாராக இருந்த நிலையில், சீனா மீண்டும் மறுப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தில், இந்தியாவின் நடவடிக்கைக்கு 4ஆவது முறையாகச் சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது.
மசூத் அசார் சுதந்திரமாக நடமாடுவது எப்படி?
கடந்த 1999ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் வசம் இருந்த மசூத் அசாரை இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கடத்தலின் போது 155 கைதிகளை பிணையாக வைத்து மிரட்டி தாலிபன் இயக்கம் அவனை கந்தகாரில் விடுவித்தது. மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்திய அல்கொய்தா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுடன் மசூத் அசாருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து வழக்கு ஏதும் பதியப்படாததால், மசூத் அசார் சுதந்திரமாக நடமாடி வருவது குறிப்பிடத்தக்கது.