சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுக்களை குவித்த ‘பரியேறும் பெருமாள்’!

 

சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுக்களை குவித்த ‘பரியேறும் பெருமாள்’!

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பார்வையாளர்களிடம் பாராட்டுக்களை பெற்றது.

சென்னை: கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பார்வையாளர்களிடம் பாராட்டுக்களை பெற்றது.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்துக்கு மக்களிடத்தில் அமோக வரவேற்பு கிடைத்தது. கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு நடித்துள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தை அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

கோவாவில் நடைபெறும் 49வது சர்வதேச திரைப்பட விழா கடந்த நவ.20ம் தேதி தொடங்கியது. ஆண்டுதோறும் நடத்தப்படும் கோவா சர்வதேச திரைப்படவிழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் திரையிடப்பட்டது. சமூகத்தின் முக்கியமான பிரச்னையை பேசியுள்ள இப்படம் பிற மாநில பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

சாதிய ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் ஆணவக் கொலைகள் விபத்துக்களாகவும், தற்கொலைகளாகவும் சித்தரிக்கப்பட்டு மூடி மறைக்கப்படுவதை வன்முறை இல்லாமல் கூறப்பட்டுள்ளது. இப்படம் வெளியாகி விமர்சனம் மற்றும் வசூல் ரீதியில் மட்டுமல்லாமல் மக்களிடமும், திரை பிரபலங்களிடமும் பாராட்டுக்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.