சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு: சென்னையில் பலத்த பாதுகாப்பு!
அயோத்தியில் உள்ள இடத்தை ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் மற்றும் நிர்மோஹி அக்காரா ஆகிய மூன்று தரப்பினரும் சரிசரமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தது
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அயோத்தியில் ராமஜென்ம பூமி என்று சொல்லப்படும் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கை விசாரித்து வந்தது. அதாவது கடந்த 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம், அயோத்தியில் உள்ள இடத்தை ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் மற்றும் நிர்மோஹி அக்காரா ஆகிய மூன்று தரப்பினரும் சரிசரமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மூன்று பிரிவினரும் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் கடைசிகட்ட விசாரணை அக்டோபர் 18ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இந்த அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண், டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர் தீர்ப்பு வழங்கவுள்ளனர். இதனால் நாடெங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் 1லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் முக்கிய வழிபாட்டுத் தலங்கள், கட்சி அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.