சர்கார் கதை திருட்டை வன்மையாக கண்டிக்கிறேன்: முடிந்து போன கல்யாணத்திற்கு மேளம் அடிக்கும் பவர் ஸ்டார்!

 

சர்கார் கதை திருட்டை வன்மையாக கண்டிக்கிறேன்: முடிந்து போன கல்யாணத்திற்கு மேளம் அடிக்கும் பவர் ஸ்டார்!

சர்கார் திரைப்படம் வெளியாகி ஆளும் கட்சியுடன் மோதல் ஏற்பட்டு, பெரும் போராட்டங்களே ஓய்ந்துவிட்ட நிலையில், கதை திருட்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

சென்னை: சர்கார் திரைப்படம் வெளியாகி ஆளும் கட்சியுடன் மோதல் ஏற்பட்டு, பெரும் போராட்டங்களே ஓய்ந்துவிட்ட நிலையில், கதை திருட்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘கோலி சோடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலம் தமிழ் சினிமாவில் இமேஜ் பெற்ற இவரை கலாய்ப்பதற்காகவே சமூகவலைதளங்களில் எப்போதும் ஒரு கூட்டம் தயாராகவே இருக்கும்.

அவர்களுக்குத் தீனி போடும் விதமாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி ஒன்றை தற்போது கொடுத்துள்ளார்.

தீபாவளி அன்று வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ‘சர்கார்’ திரைப்படத்தின் கதைக்கு உரிமை கோரி வருண் ராஜேந்திரன் என்ற உதவி இயக்குநர் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு சுமுகமாக முடிக்கப்பட்டு, படம் வெளியாகி, அதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து, விஜய் பேனர்கள் கிழிக்கப்பட்டு, காட்சிகள் நீக்கப்பட்டு அவரவர் வேலையைப் பார்க்கவே சென்று விட்டனர்.

இந்நிலையில், ‘சர்கார்’ கதை திருடப்பட்டதற்கு தான் கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக பவர் ஸ்டார் சீனிவாசன் கடும் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை கேள்வி பட்டு, குஷியான அவரது ரசிகர் பட்டாளம், “முடிந்து போன கல்யாணத்திற்கு மேளம் அடிக்க தலைவன் வந்துட்டாண்டா” என்று ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.