சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதிசெய்தது உச்ச நீதிமன்றம்!
சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று ராஜகோபால் கொலை செய்ததாக குற்றம் சாற்றப்பட்டது
சென்னை: ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் கொலை வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் ஜீவஜோதி. சரவண பவன் ஹோட்டல் மேலாளரின் மகளான ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். ஜீவஜோதியின் மீது சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவரை அடையும் நோக்கில் சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று ராஜகோபால் கொலை செய்ததாக குற்றம் சாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை பூந்தமல்லி நீதிமன்றம், ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.55 லட்சம் அபராதமும் விதித்தது. இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த டேனியல், கார்மேகம், ஹூசைன், தமிழ்செல்வன், முருகானந்தம், சேது, பட்டுரங்கம், காசி விஸ்வநாதன் 7 முதல் 9 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த கொலை வழக்கின் பகுதியாக பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கான கடத்தல் வழக்கில் ராஜகோபாலுக்கு 3 ஆண்டுகளும், மற்ற 8 பேருக்கு இரண்டு ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்ட
இந்த இரண்டு வழக்குகளிலும் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதே சமயம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் முறையிடப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 2009-ம் ஆண்டு தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், கிழமை நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரித்து உத்தரவிட்டது.
அதன்பின்னர் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது. அத்துடன் தற்போது ஜாமினில் இருக்கும் ராஜகோபால் வருகிற ஜூலை மாதம் 7-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் வாசிங்க