சம வேலைக்கு சம ஊதியம்; போராட்டம் ஓயாது என இடைநிலை ஆசிரியர்கள் எச்சரிக்கை
ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
சென்னை: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள், ‘சம வேலைக்குச் சம ஊதியம்’ என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசின் ஏழாவது ஊதியக் குழுவின் அரசாணைக்குப் பிறகு, தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே பெரிய அளவிலான ஊதிய முரண்பாடுகள் நிலவி வருகின்றன. இந்த ஊதிய முரண்பாடுகளைக் களையவேண்டி, இம்மாத இறுதியில் போராட்டம் நடத்தப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.
அதன்படி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் உள்ள பள்ளிகல்வித்துறை (டி.பி.ஐ.) வளாகத்தை முற்றுகையிட முயன்றதால், கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து ராஜரத்தினம் மைதானத்தில் தங்கவைக்கப்பட்ட அவர்கள் அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் உணவு ஏற்பாடு செய்து தந்த போதும் ஆசிரியர்கள் உணவருந்த மறுத்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் கூறுகையில், எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை நாங்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடுவோம். எங்களின் ஒரே கோரிக்கை, ‘சம வேலைக்கு; சம ஊதியம்’ அது நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என்று தெரிவித்துள்ளனர்