சம்பள பாக்கி?: மெர்சல் மேஜிக் மேனுக்கு வித்தை காட்டும் தேனாண்டாள்!

 

சம்பள பாக்கி?: மெர்சல் மேஜிக் மேனுக்கு வித்தை காட்டும் தேனாண்டாள்!

தளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் பணியாற்றிய மேஜிக் மேனுக்கு சம்பள பாக்கி உள்ளதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை: தளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் பணியாற்றிய மேஜிக் மேனுக்கு சம்பள பாக்கி உள்ளதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ’மெர்சல்’ படத்தில் 3 வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்திருந்தார். அதில் மேஜிக் மேனாக நடித்து சில மாய வித்தைகளை காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தார். அப்படத்தில் மேஜிக் காட்சிகளில் பணியாற்றியவர் மேஜிக் மேன் ராமன் ஷர்மா.

கனடா நாட்டைச் சேர்ந்த ராமன் ஷர்மாவுக்கு ’மெர்சல்’ படத்தில் பணியாற்றியதற்கான சம்பளம் கொடுக்கப்படவில்லை என பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ராமன், ‘மெர்சல்’ திரைப்படம் நல்ல படம் தான். படத்தின் இயக்குநர் அட்லி, நடிகர் விஜய் என எல்லோரும் நன்றாக பழகினர். ஆனால் என்ன பயன், மெர்சல் படம் ரிலீசாகி 14 மாதங்களுக்கு மேல் ஆகியும் சம்பளம் கொடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த முரளி என்பவருக்கு பலமுறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை, தவிர்த்துவிட்டார். எனது உழைப்புக்கான ஊதியத்தை வாங்க பல முறை இந்தியா வந்துவிட்டேன். ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை. சமீபத்தில் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியபோது, அதற்கு முரளி என்பவர் பதில் அளித்துள்ளார். மேனேஜரிடம் பேசி உங்களது சம்பள பாக்கியை தீர்ப்பதாக கூறினார். ஆனாலும் பணம் கைக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

‘மெர்சல்’ படத்தில் பணியாற்றியதற்காக தனக்கு ரூ.4 லட்சம் சம்பளம் வரவேண்டி உள்ளதாகவும், இதனை திரும்பப்பெற நல்ல வழக்கறிஞரை பார்க்க வேண்டும் என்று மேஜிக் மேன் ராமன் ஷர்மா தெரிவித்துள்ளார். இவரது புகார் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘மெர்சல்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெற்றி கரமாக ஓடி ரூ.200 கோடி வரை வசூலித்ததாக கூறப்பட்ட நிலையில், படத்தில் பணியாற்றிய ஊழியருக்கு ரூ.4 லட்சம் சம்பள பாக்கி வைத்திருப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.